Mar 30, 2026 - 05:42 PM -
0
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாக்கா பகுதியில் ஒரு பயங்கர கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது கள்ளக் காதலியைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் பதுக்கி வைத்த கடற்படை ஊழியரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலியான அந்த பெண் கடற்படை வீரர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும், அதன் காரணமாகவே அவரை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்ததாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
விசாகப்பட்டினத்தின் எல்.வி. நகர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரா, இந்தியக் கடற்படையில் ஏர்கிராஃப்ட் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவருக்கு, கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த மௌனிகா (28) என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறியது.
சமீபத்தில் ரவீந்திராவின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், நேற்று (29) மௌனிகாவை ரவீந்திரா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். நள்ளிரவில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ரவீந்திரா, கத்தியால் மௌனிகாவை குத்திக் கொலை செய்தார். கொலை செய்ததோடு நில்லாமல், ஆதாரங்களை மறைக்க மௌனிகாவின் உடலை ரவீந்திரா இரண்டு துண்டுகளாக வெட்டினார். ஒரு பகுதியை வீட்டின் பிரிட்ஜில் பதுக்கி வைத்தார்.
மற்றொரு பகுதியை ஒரு மூட்டையில் கட்டி வீட்டின் மூலையில் வைத்துள்ளார். கொலை செய்த பிறகு, ரவீந்திரா நேரடியாக காஜுவாக்கா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றை விவரித்து சரணடைந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மௌனிகா தன்னைப் பணத்திற்காகத் தொடர்ந்து சித்திரவதை செய்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தான் கொலை செய்ததாகவும் ரவீந்திரா ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது காஜுவாக்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
