Apr 3, 2026 - 09:08 PM -
0
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் உலக உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரான உச்சத்தை எட்டியுள்ளன.
இந்த போர் மோதல்கள் மேலும் 40 நாட்களுக்கு மேல் நீடித்தால், எரிபொருள் மற்றும் உரம் போன்ற உற்பத்திச் செலவுகள் உயர்மட்டத்தில் இருக்கும் என்பதால், விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைக் குறைக்க முற்படலாம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, இந்த ஆண்டின் உணவு விநியோகம் மட்டுமன்றி, அடுத்த ஆண்டின் உணவு விநியோகம் மற்றும் பொருட்களின் விலைகளிலும் கடும் தாக்கம் ஏற்படும் என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி, உலக உணவு விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தை விட 2.4% அதிகரித்துள்ளது.
அதன்படி, சீனி விலை 7.2% ஆகவும், தாவர எண்ணெய் விலை 5.1% ஆகவும் உயர்ந்துள்ளதுடன், கோதுமை விலையும் 4.3% ஆல் அதிகரித்துள்ளது.
இருப்பினும், அறுவடைக்காலம் மற்றும் இறக்குமதி கேள்வி குறைவடைந்ததன் காரணமாக அரிசி விலை 3.0% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
