Apr 6, 2026 - 03:58 PM -
0
விளையாட்டுத் துறையில் வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய மத்திய அரசு பொலிஸ், ராணுவம் உள்ளிட்ட படைப் பிரிவுகளில் கௌரவப் பொறுப்பை வழங்கி விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சச்சின், தோனி உள்ளிட்ட நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் இந்திய ராணுவத்தில் கௌரவப் பொறுப்புகளை வகித்து வருகிறார்கள்.
இதில், இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கிண்ண தொடர்களில் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி, ராணுவத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சிறிது காலம் தோனி பணியாற்றினார். இதேபோல், சிறப்பு பாராசூட் பயிற்சியையும் மேற்கொண்ட தோனி பாராசூட் வீரராக உள்ளார். இந்திய ராணுவத்தின் பிரிவான பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் தோனி பணியாற்றியிருக்கிறார்.
பிராந்திய இராணுவம் இந்திய இராணுவத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படைப் பிரிவு இது. இந்திய ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை வழங்கும் பகுதி நேரத் தன்னார்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ரிசர்வ் படையாக 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது.
நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரத்திலும் சரி, பேரிடர் காலத்திலும் சரி ராணுவத்துடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவர். இந்தப் பிரிவின் 106 பட்டாலியனில் தோனி பணியாற்றியிருக்கிறார். இதற்கிடையே, ராணுவத்தில் பதவி வகிக்கும் தோனிக்கு என்ன சம்பளம் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக தோனியின் சம்பளம் 1.21 லட்சம் ரூபா முதல் 2.12 லட்சம் ரூபா வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தில் தோனியின் ரேங்க்கில் உள்ளவர்கள் இந்த அளவு சம்பளத்தைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கௌரவ பதவியில் இருக்கும் தோனி இந்த சம்பளத்தைப் பெற முடியாது.
ஏனென்றால், கௌரவ அதிகாரிகள் சேவை அதிகாரிகள் அல்ல. அவர்கள் இராணுவத்திற்காக கடமைகள் எதையும் செய்வதில்லை என்பதால், அவர்களுக்கு எந்த சம்பளமோ அல்லது கௌரவ ஊதியமோ வழங்குவது கிடையாது. பிரபலங்களுக்கு இதுபோன்ற கௌரவ பதவிகளை அளிப்பதன் மூலம், பொதுமக்களை ஆயுதப் படைகள் மீதும் கவனம் செலுத்துவதற்காக இதுபோன்று செய்யப்படுகிறது.
