Apr 7, 2026 - 10:40 AM -
0
"பார்வை ஒரு தடையல்ல" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடற்பகுதியை, ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
காராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே - அருணா தம்பதியினரின் மகளான ஈஸ்வரி (17), தற்போது 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிறவியிலேயே முழுமையாகப் பார்வையற்றவராக இருந்தபோதிலும், தனது விடாமுயற்சியால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே கடலில் நீந்தி தனது திறமையை நிரூபித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீந்துவதற்குப் பார்வை ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்த, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ தொலைவு கொண்ட பாக் நீரிணையை நீந்திக் கடக்கத் தீர்மானித்தார். இதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கைத் தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டது.
அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த 05 ஆம் திகதி மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் ஈஸ்வரி புறப்பட்டார். அவருடன் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாருக்குச் சென்றனர்.
நேற்று (06) அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கிய ஈஸ்வரி, அன்று பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தார். சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தை 11 மணி 15 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ளார். இதன் மூலம், பாக் நீரிணையைத் தனியாக நீந்திக் கடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஈஸ்வரிக்கு இந்தியக் கடலோரக் காவல் படையினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
--
