Apr 21, 2026 - 07:37 AM -
0
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (20) இரவு டி.வி. தெரணவின் '360' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மோசடி நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், ஏற்படக்கூடிய சாத்தியமான நிலமைகள் குறித்து மட்டுமே அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க:
"இந்தச் சம்பவத்தில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. நானும் எமது அமைச்சர்களும் அதையே கூறுகிறோம். மோசடி நடைபெறாத ஒரு சூழலில், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகிறது. அரசாங்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது நாம் அறிந்ததே. அரசாங்கத்தின் நிலைப்பாடு மட்டுமன்றி, இந்த ஒட்டுமொத்த கொள்முதல் செயல்முறையிலும் எந்தக் குறையும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கொள்முதல் நிபந்தனைகளின் கீழ் இந்தப் பதிவு இந்த நேரத்தில் நடைபெறவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். கொள்முதல் ஆணைக்குழு 2025 ஆகஸ்ட் மாதம் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது.
கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ள அந்தத் தரவுகள் தவறானவை. ஏலதாரர்களுக்கு எழுதிய கடிதங்கள் உள்ளன. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் 4980 வைப்பிலிடப்பட்டிருக்கும் போது, மீண்டும் ஏன் 20-ஐ சேர்க்க வேண்டும்? கொடுக்கல் வாங்கல் நடக்கும் போதுதான் 20 குறைவு என்பது தெரியவரும். சரியாகப் பணம் செலுத்தவில்லை என்று கூறுவது இதனால்தான்.
அதனால்தான் நான் கூறுகிறேன், சில அறிக்கைகள் வந்த விதம் மற்றும் அவற்றில் சில விடயங்கள் சேர்க்கப்பட்ட விதம் ஆகியவற்றில் சிக்கல்கள் உள்ளன. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை முழுமையாகத் தவறு என்று நான் கூறவில்லை, அதில் உள்ள சில விடயங்கள் மற்றும் பகுதிகள் தவறானவை என்றே கூறுகிறேன்." என்றார்.
