Apr 21, 2026 - 11:48 AM -
0
மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு நில்வலா கங்கையை மையப்படுத்தி விசேட திட்டமாக உப்புநீர்த் தடுப்பு அணை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
இந்த உப்புநீர்த் தடுப்பு அணை காரணமாக 2019ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு வருடமும் நெற்பயிர்ச் செய்கைக்கு பாதிப்புகள் ஏற்பட்டமை பதிவாகியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கம்புருபிட்டிய, கெகுணதுர, மடிஹே, மாலிம்பட, மெத உயங்கொட, கலல்ல, வில்பிட்டிய மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் இவ்வாறு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தன.
இந்தச் சிக்கல் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடந்த கால அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்திய போதிலும், அவை உரிய கவனம் செலுத்தாத காரணத்தால் இப்பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசேட கவனம் செலுத்தி, 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த பயிர்ச் செய்கை பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்க 1,200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 2019 சிறுபோகம் முதல் 2022 சிறுபோகம் வரையிலான தொடர்ச்சியான 7 போகங்களுக்காக இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாத்தறை மாவட்டச் செயலாளர், மாத்தறை விவசாய அபிவிருத்தி ஆணையாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பரிந்துரைகளை ஆராய்ந்து, உப்புநீர்த் தடுப்பு அணையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏற்கனவே விவசாய சேவை மையங்களில் அறிக்கையிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
