Apr 22, 2026 - 09:53 AM -
0
தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி, அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை 'புறக்கணித்ததால்' அந்த நபர் மீது கோபமடைந்த பெண், அவர் இறப்பதை கேமராவில் பதிவுசெய்து பார்த்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதான பிரேர்னாவும், கிரணும் கடையில் சக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், சமீபகாலமாக கிரண் தனக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று பிரேர்னா உணர்ந்துள்ளார்.
தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பிரேர்னா, தெற்கு பெங்களூருவின் அஞ்சனபுராவில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தபோது கிரணை அழைத்தார். கிரண் அங்கு வந்ததும், இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அந்தப் பெண், கிரணின் கண்களைக் கட்டி, அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து, வீடியோ எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பிறகு பிரேர்னா கிரணைக் கட்டத் தொடங்கினார். அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, "வெளிநாடுகளில் பிரபலமாகி வரும்" ஒரு முறையில் அவருக்கு தன் காதலை தெரிவிக்க விரும்புவதாலேயே அவ்வாறு செய்வதாக பிரேர்னா கூறியுள்ளார்.
கைகள் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கிரண் அந்த திருமண ப்ரோபோசலுக்காகக் காத்திருந்தபோது, பிரேர்னா தான் முன்னரே ஏற்பாடு செய்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை கொண்டு வந்துள்ளார். அவள் அவன் மீது அந்த திரவத்தை ஊற்றி, பின்னர் அவருக்குத் தீ வைத்தார்.
"நாங்கள் அந்தப் பெண்ணைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்தான் அந்த நபருக்குத் தீ வைத்து அவரைக் கொன்றார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் உறவில் இருந்ததாகவும், அவர் தன்னை புறக்கணிப்பதாக அப்பெண் உணர்ந்ததால் இப்படி செய்ததாக தெரிவித்தார்," என பொலிஸார் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
