Apr 22, 2026 - 11:54 AM -
0
தனது கோழிக் கடையைச் சுத்தம் செய்யும்போது மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கிய நிலையில் அயலவர்களால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் அளவில் அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மாலை வேளையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளைக்கமைய, பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்டார். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சடலம் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--
