Apr 22, 2026 - 01:58 PM -
0
நுவரெலியாவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் புஷ்பிகா ஜயதாச இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கவும், தொடர்புடைய துப்பாக்கியை வழக்கு சான்றுப் பொருளாக நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. சந்தேகநபரின் வெளிநாட்டுப் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 21 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட மோதலில், பிரேமலால் ஜயசேகர கைத்துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 1996 ஆம் ஆண்டின் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமைக்காக அவர் மீது நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்து பிணை கோரினர். எனினும், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், முறைப்பாட்டாளர் அல்லது சாட்சிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என எச்சரித்தார்.
குறித்த துப்பாக்கிக்கான உரிமம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அது பாதுகாப்பு அமைச்சினால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
