Apr 23, 2026 - 03:35 PM -
0
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹெக்கர்கள் மின்னஞ்சல் ஊடாக அமைச்சின் கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய தூதுவர் மற்றும் கடன் வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன சூரியபெரும மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் சைபர் குற்றவாளிகள் எமது கட்டமைப்புக்குள் நுழைய முயற்சிப்பதை நாம் அறிந்துகொண்டோம்.
இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு எமது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுத்து அதனைத் தீர்த்தோம்.
எனினும், இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் நடந்திருக்கலாம் என எமக்குத் தோன்றியது. அதனால்தான் கடந்தகாலக் கொடுப்பனவுகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டத்தைத் தயார் செய்தோம்.
அதற்காகக் காலம் எடுத்துக்கொண்டோம். அதன் போதே, கடந்த ஜனவரி மாதத்திலும் ஒரு கொடுப்பனவின் போது ஹெக்கர்களின் செயற்பாடு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
