May 9, 2026 - 01:54 PM -
0
நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேசிய செயல்முறையை உருவாக்கும் நோக்கில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நீர் தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து, நாடு முழுவதும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பல்துறை கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
நீண்டகாலமாக அவசியமாக இருந்த ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு செயல்முறையை உருவாக்கும் முதல் கட்டமாக இக்கூட்டம் அமைந்தது. பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த இந்த முக்கிய முயற்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் Dr. மதுர செனவிரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திரு தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களின்தற்போதைய தீவிரத்தன்மையை விளக்கினார். இத்தகைய உயிரிழப்புகள் சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய விடயமாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், முறையான பாதுகாப்பு செயல்முறை இல்லாதது தேசிய நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் சர்வதேச மதிப்பை பேணுவதற்கும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர், நீர்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை தேசிய பாடத்திட்டத்தில் இணைக்கும் யோசனையை முன்வைத்தார். இதன் மூலம் மாணவர்களிடையே வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு உணர்வை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர், இளைஞர்களின் திறனையும் பங்களிப்பையும் வலியுறுத்தினார். சிறப்பு பயிற்சி திட்டங்கள் மூலம் இளைஞர்களை இயக்கி, திறமையான தன்னார்வப் படையினரை உருவாக்குவதன் மூலம் தொழில்முறை உயிர்காக்கும் சேவைகளுக்கு ஆதரவான நிலையான சமூக அடிப்படையிலான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு, முன்மொழியப்பட்ட தேசிய செயல்முறையில் தங்களது பொறுப்புகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
