May 11, 2026 - 12:38 PM -
0
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிக் கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான புவியியல் அமைவிடம்சார் செயற்கை நுண்ணறிவு (GeoAI) தொடர்பான கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கினை, பேரனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்களுக்கான சங்கத்துடன் (ADRiMP) இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தவிருக்கிறது.
மே மாதம் 14 ஆம் திகதி இக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். மேம்பட்ட வரைபடக் கருவிகளும், அமெரிக்கா தலைமையிலான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும், அவற்றிற்கான பதிலளிப்பையும் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை இந்நிகழ்வு காட்சிப்படுத்தும்.
வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலைக் கோலங்கள் போன்ற புவியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, இயற்கைப் பேரனர்த்தங்களை அதிகாரிகள் சிறப்பாக எதிர்வு கூறுவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் அவற்றிற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் GeoAI உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைவிடம்சார் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தைப் பின்பற்றி, வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அவசரகால நிலைமைகளில் விரைவான, மிகவும் துல்லியமான மற்றும் தரவுகள் மீதமைந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு இக்கருவிகள் உதவிசெய்கின்றன.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவினைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான GeoAI முன்முயற்சியினை ஆரம்பிப்பதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்தது. ADRiMP உடன் இணைந்து, பேரனர்த்த முகாமைத்துவ நிபுணர்களான கலாநிதி நொவில் விஜேசேகர மற்றும் கலாநிதி அஸ்லம் சஜா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இச்செயற் திட்டமானது, தீவிர வானிலை நிகழ்வுகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை பலப்படுத்துவதையும், நீண்டகால மீண்டெழும் திறனைக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இச்செயற்திட்டமானது, 150 புவியியல் தகவல் அமைப்பு (GIS) தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளதுடன், பேரனர்த்த அபாய முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான, செயற்கை நுண்ணறிவினால் மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் வழங்கியுள்ளது. உதாரணமாக, வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை நிகழ் நேரத்தில் வரைபடமாக்குவதற்கும், குறிப்பிட்ட சமூகங்களை ஒரு புயல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைக் கணிப்பதற்கும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மிகவும் செயற்திறனுடைய வகையில் மக்களை வெளியேற்றுவதை திட்டமிடுவதற்கும் இக்கருவிகள் உதவியாக அமையும்.
இக்கண்காட்சியில் இவ்வாறான திறன்கள் விளக்கிக்காட்டப்படும். இலங்கை முழுவதும் ஏற்படக்கூடிய மெய்யான பேரனர்த்த சவால்களுக்கு இத்தொழிநுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில், புத்தாக்க, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட GeoAI தீர்வுகள் இக்கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கில் காட்சிப்படுத்தப்படும்.
மே மாதம் 14 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இதைப் பார்வையிடுவதற்காக பதிவு செய்தல் அவசியமாகும். பதிவு செய்வதற்கு https://arcg.is/0b9bbL2 எனும் இணைப்பினை சொடுக்கவும்.
இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://lk.usembassy.gov/ எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbSL இனைப் பின்தொடரவும்.
