May 19, 2026 - 03:08 PM -
0
ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, 'அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்' ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் காங்கோவில் ஏற்பட்டுள்ள புதிய இபோலா பரவல் குறித்து கருத்து தெரிவித்ததுடன், கடந்த வார இறுதியில் அதனை ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.
அத்துடன் 'MV Hondius' என்ற சுற்றுலா கப்பலில் இருந்து பதிவான அரிய வகை ஹண்டா வைரஸ் பரவல் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.
உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த இரு வைரஸ்களினதும் பரவலானது "நமது பிரச்சினைகள் நிறைந்த உலகின் புதிய நெருக்கடிகள் மட்டுமே" என்று கூறினார்.
"உலகளாவிய மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் நிதி வெட்டுக்கள் நிறைந்த, கடினமான, ஆபத்தான மற்றும் பிளவுகள் உள்ள ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்கா விலகியமை மற்றும் பெருமளவிலான நிதி வெட்டுக்கள் காரணமாக உலக சுகாதார அமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ள பின்னணியிலேயே, இந்த 2026 உலக சுகாதார பொதுச் சபை கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து சுகாதார அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர், உலக சுகாதார அமைப்பின் வரவுசெலவுத் திட்டம் 21% அதாவது சுமார் ஒரு பில்லியன் டொலர்களால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டு திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அவசர நிலைக்கு மத்தியிலும் உலக சுகாதார அமைப்பினால் ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா பட்டதாரி நிறுவனத்தின் உலகளாவிய சுகாதார மையத்தின் இணை இயக்குனர் சூரி மூன் சுட்டிக்காட்டுகையில், உலக சுகாதார அமைப்பு இந்த கடினமான காலப்பகுதியை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஹண்டா வைரஸ் நெருக்கடி மூலம், உலகிற்கு மிகவும் பயனுள்ள, நம்பகமான, நடுநிலையான மற்றும் நிலையான நிதியுதவியைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தேவை மிகத் தெளிவாகப் புலப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

