May 24, 2026 - 09:42 PM -
0
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, அண்மைக்கால நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்கள் மற்றும் வாகன இறக்குமதி மீதான கூடுதல் கட்டணம் காரணமாக வாகன விலைகள் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி புதிய நிதியியல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை 25 முதல் அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன,
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 வீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் புதுப்பிக்கப்படும் பழைய கடன்களுக்கும் இதுவே பொருந்தும்.
அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV limits) மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.
தங்கம் மற்றும் வாகனக் கடன்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த மெக்ரோபிரூடென்ஷியல் கொள்கை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

