May 26, 2026 - 01:59 PM -
0
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் பாலா. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
2021 இல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்திருந்தார் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர். பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, 2008 ஆம் ஆண்டு சந்தனா என்ற பெண்ணை மணமுடித்தார். 2009 இல் இவர்கள் பிரிந்தனர்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2019 இல் பிரிந்தனர். 2021 இல் எலிசபெத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2024 இல் இந்த தம்பதி பிரிந்தனர். தற்போது கோகிலா என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக நடிகர் பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், “பேசுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் துன்புறுத்தபட்டு வருகிறேன். சட்டத்தின் பெயரால் ஒரு ஆண் துன்புறுத்தப்படுகிறார். யாரால் என்று அவர்கள் பெயரை நான் சொல்ல முடியாது. அவர்கள் எதையும் சொல்லலாம். நான் ஒரு ஆண். என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் ஒரு ஆண், நான் எதுவும் சொல்லக்கூடாது. எவ்வளவு சோகம் இருந்தாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு புன்னகைக்க வேண்டும், சரிதானே?"
ஊடகங்கள் நல்ல காரியங்களைச் செய்கின்றன. பல உண்மைகளை வெளியே கொண்டு வருகின்றன. அதே நேரம் சில பொய்களையும் அவை வியூஸூக்காக செய்கின்றன. அப்படியான ஊடகங்களையே ஏமாற்றும் ஒருவர் கேரளாவில் இருக்கிறார் தெரியுமா? எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இன்று என் மனைவியின் பிறந்தநாள். இன்று காலை, நாங்கள் எங்கள் குடும்பத்துடன் வைக்கம் சிவன் கோவிலில் இருந்தோம். என் மனைவி, அவளுடைய தங்கை, என் தாய்மாமன், மற்றும் சித்தப்பா என எல்லோரும் வந்திருக்கிறார்கள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் எல்லா ஊடகங்களையும் அழைத்து உண்மையை வெளிப்படையாகச் சொல்வேன். அதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையலாம். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. உண்மை வெளியில் வரக்கூடாதென்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்றுவிடுங்கள்" என்று பேசியுள்ளார்.
என்னைச் சுற்றி வரும் வழக்குகள், சர்ச்சைகள், தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் என நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், “இனிமேல் யாராவது என்னைப்பற்றி தவறாக பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து உண்மையை சொல்லுவேன்" என்று எச்சரித்துள்ளார். இதிலிருந்து அவர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

