May 26, 2026 - 03:54 PM -
0
பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், தொலைபேசியில் ஆபாச வீடியோ எடுத்த கேரள இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழா நாள் என்பதால் திருஆவினன்குடி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தரிசன வழியில் நின்றிருந்த பெண் பக்தர்களிடம் நபர் ஒருவர் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது தொலைபேசி மூலமாகப் பெண் பக்தர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த நபரைப் பிடித்த பக்தர்கள் பழனி அடிவாரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
அவரது தொலைபேசியை பெற்று ஆய்வு செய்தபோது, அதில் பெண் பக்தர்களை வீடியோ எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் களத்தூரைச் சேர்ந்த 35 வயதான இம்மானுவேல் என்பது தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், கைது செய்து சிறையிலடைத்தனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்களிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

