May 27, 2026 - 11:31 AM -
0
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரன்வீர் சிங்.
அப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படத்தில் வரும் "தெய்வா" கடவுள் முகபாவனைகளை கிண்டல் செய்தார். குறிப்பாக, அந்த கடவுள் பேய் என்று கூறியிருந்தார்.
இதற்கு தெய்வா கடவுளை வணங்கி வரும் துளு மொழி பேசும் மக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று மன்னிப்பு கோரினார் ரன்வீர் சிங்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மக்களின் ஆன்மீக நம்பிக்கையை புரிந்துக் கொள்ள மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்லுமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்ற ரன்வீர் சிங், பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து தியானம் செய்தார்.

