May 27, 2026 - 01:22 PM -
0
இதுவரை 200 மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது நான்கு மாவட்டங்களில் 50 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் எதிர்வரும் மழைக்காலத்தில் நோய் பரவும் அபாயம் காணப்படுவதால், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், கொதிக்க வைத்து ஆறவைத்த நீரைப் பருகுவது மிகவும் அவசியம் என்றும், குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தை இருந்தால், அக்குழந்தையை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் உசிதமானது என்றும் சுகாதாரப் பிரிவினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். தெனியாய பிரதேசத்தில் உள்ள சில பாடசாலை மாணவர்களிடையே பரவிய மெனிஞ்சைடிஸ் நோய், தற்போது மேலும் சில பிரதேசங்களிலிருந்தும் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

