May 28, 2026 - 04:18 PM -
0
கடந்த சில வாரங்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வைத்தியர்களும் கூட, “வெளியில் சென்றாலே உச்சந்தலையில் இருந்து கால் வரை நீர்ச்சத்தை உறிஞ்சி எடுக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் ஆபத்தானது” என்று எச்சரிக்கின்றனர்.
வியர்வை படிந்த ஆடைகளை தொடர்ந்து அணிவதால் அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்றும், வெப்பம் காரணமாக, வியர்வையுடன் சேர்ந்து உப்புச்சத்து போன்றவையும் வெளியேறுவதால் உடல் விரைவாகவே சோர்வடைந்து உடல் உறுப்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். எனவே அதிக வியர்வையோடு வெகுநேரம் வெயிலில் இருக்க வேண்டாம் என்கின்றனர் வைத்தியர்கள்
முடிந்தவரை காற்று இருக்கும் இடத்திற்கு உடனடியாக சென்று ஒய்வெடுக்க அறிவுறுத்துகின்றனர்.
அதேபோல வெயில் நேரத்தில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் சன் ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ள வைத்தியர்கள், வெயிலில் விளையாடக்கூடிய சிறுவர்கள் கை, கால்களை முறையாக கழுவி வந்தாலே வைரஸ் தொற்றுகளை தவிர்க்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானங்களை குடிப்பதால் உடலுக்கு எந்த வித பயனும் இல்லை என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சோடா போன்ற குளிர்பானங்களை எடுத்துக் கொள்வதால் வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இயற்கையான பழச்சாறு, மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தியர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

