May 28, 2026 - 05:42 PM -
0
இந்தியாவின் குஜராத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் கணவர் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், பாலன்பூரில் உள்ள கணேஷ்புராவைச் சேர்ந்தவர் நிகேஷ். இவர், கடந்த 19 ஆம் திகதி தனது மனைவியை காணவில்லை என்று பாலன்பூர் மேற்கு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி சிக்னல் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. பெண்ணின் கணவர் நிகேஷ் திருமணத்துக்குப் பின் அவருடன் விலகியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மனைவியை உதாசீனப்படுத்தியவர் அவரை அடியோடு வெறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் கட்டிய மனைவியை வீட்டை விட்டு அடித்து துரத்த திட்டமிட்டுள்ளார்.
அப்போது தான் தனது மனைவியை நண்பர்கள் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக நண்பர்களிடம் 50,000 ரூபாய் பேரம் பேசி வாங்கியுள்ளார். தொடர்ந்து நிகேஷின் நண்பர்கள் அவரின் மனைவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் அவரை ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். அங்கு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 10 நாட்களுக்கு மேலாக 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் சிந்தியுள்ளார்.
அத்துடன், அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டனர். அதைக் கேட்டு பொலிஸார் அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளனர்.
பின்னர், மனைவி காணவில்லை எனக் கூறி நாடகமாடிய கணவன் நிகேஷை பொலிஸார் கைது செய்தனர். மேலும் பெண்ணை கடத்தி சித்ரவதை செய்த சஞ்சய், அசோக், சச்சின் தர்பார் உட்பட மேலும் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவியை 50,000 ரூபாய்க்கு கணவனே தனது நண்பர்களிடம் விற்பனை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணை சிறை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கணவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

