Jun 1, 2026 - 04:28 PM -
0
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' (LIK) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், படத்தின் இந்தத் தோல்வி குறித்தும், ஆன்லைனில் பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் குறித்தும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு நீண்ட உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆன்லைனில் பரவிய கடுமையான எதிர்மறை விமர்சனங்களின் காரணமாகவே, தியேட்டர்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் தவறவிட்டுவிட்டதாகப் பல ரசிகர்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்து வருகிறார்கள். சில திரைப்படங்கள் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு தப்பிப்பிழைத்து விடுகின்றன.
ஆனால் சில படங்கள் தோற்றுவிடுகின்றன. ஒரு திரைப்படத்திற்கு சினிமா வட்டாரத்திலிருந்தோ, சக திரைத்துறையினரிடமிருந்தோ அல்லது செல்வாக்குமிக்க நபர்களிடமிருந்தோ போதிய ஆதரவு கிடைக்காதபோது, பொதுமக்களின் பார்வை அந்தப் படத்தின் விதியை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.
தங்களுடைய புத்திசாலித்தனத்தையோ அல்லது மேலாதிக்கத்தையோ உலகிற்குக் காட்டுவதற்காக எழுதப்படும் விமர்சனங்கள், ஒரு திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; அவை பார்வையாளர்களை அந்தப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவிடாமல் தடுத்து, லட்சியத்தோடு படம் எடுக்க வரும் படைப்பாளிகளின் கனவுகளையே சிதைத்து விடுகின்றன.
'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' (LIK) திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் முடிவுகளை என்னால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதல் வார இறுதியில் நல்லதொரு தொடக்கத்தைப் பெற்ற பிறகு, இந்தத் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகளும் பிம்பங்களும் எவ்வளவு வேகமாக எதிர்மறையாக மாற்றப்பட்டன என்பதுதான் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. முற்றிலும் அசல் தன்மையுடன், புதிய முயற்சியாக எடுக்கப்பட்ட ஒரு நேர்மையான தமிழ் திரைப்படத்திற்கு, பார்வையாளர்கள் இன்னும் சற்று தாராள மனதோடு ஆதரவு தந்திருக்கலாம் என்று நான் உண்மையாகவே உணர்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதற்கு உயிர் கொடுப்பதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களை பலரும் பார்ப்பதில்லை. இந்தப் படத்தை எடுப்பது கடினமாக இருந்தது, அதனைத் திரையரங்கிற்கு கொண்டு வருவது அதைவிடக் கடினமாக இருந்தது. இத்தனை சவால்களையும் தடைகளையும் கடந்து வந்த பிறகு, இந்தப் பயணம் இப்படி ஒரு தோல்வியில் முடிவதைப் பார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இருப்பினும், சினிமா வரலாற்றில் திரையரங்கிற்கு வந்த ஆரம்பக் காலகட்டத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் நிறைந்துள்ளன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.
சினிமாத்துறையின் அறிவார்ந்த மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னிடம் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொண்டார், அது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அது "ஒரு படத்தோட வெற்றி, அதுக்குள்ள இருக்குறத விட, வெளிய தான் அதிகமா இருக்கு." என்பதாகும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

