Jun 1, 2026 - 07:17 PM -
0
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை அந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்திருந்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (01) நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகிய நீதியரசர்களின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

