Jun 5, 2026 - 11:49 AM -
0
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கில் இராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸை களமிறக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனது அரசியல் என்ட்ரி குறித்து, தனது குருநாதரான ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸ் அறிவுரை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதைப் பொறுத்து அவரது முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸை பொறுத்தவரை, ஒரு பிரபல நடிகராக அறியப்படும் அதே வேளையில், ஒரு மிகத் தீவிரமான சமூக சேவகராகவும் அறியப்படுகிறார். வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அவர் செய்துவரும் ஏராளமான உதவிகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, அவர் மீது மக்களுக்கு ஒரு தனி மதிப்பை உருவாக்கியுள்ளது.
மேலும், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மக்கள் சேவகராகவும், நேர்மையான நல்ல மனம் படைத்த மனிதராகவுமே அவர் மக்களின் மனங்களில் அதிக அளவில் பதிந்துள்ளார். இப்படி, மக்களுக்கு நன்கு பரிட்சையமான ராகவா லாரன்ஸை அரசியலுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதுடன், வெற்றியும் எளிதாகும் என்பது விஜய்யின் கணக்காக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏனென்றால், லஞ்ச ஊழல் அற்ற ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்று தமிழக முதலமைச்சர் விஜய் கூறி வருகிறார். அந்த வகையிலும் பொருந்தக் கூடியவராக ராகவா லாரன்ஸ் இருப்பதால், மக்கள் அவருக்கு வாக்களிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது என்பதும் விஜய்யின் மாஸ்டர் பிளானாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

