Jun 9, 2026 - 12:20 PM -
0
இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் ராமலட்சுமி கங்கைகொண்டானில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2 ஆவது மகன் கோவையிலும், மற்றொருவர் நாங்குநேரியில் உள்ள ஓட்டலிலும் பணியாற்றுகின்றனர்.
சமீபத்தில் கோயில் திருவிழாவில் பங்கேற்க முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது காதலருடன் ராமலட்சுமி தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. இதனால் அக்காவிடம் முத்துக்கிருஷ்ணன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். மாட்டுக்கு உணவு வைப்பதற்காக பெற்றோர் வெளியே சென்ற போது, ராமலட்சுமி மீண்டும் காதலருடன் தனியாக நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் முத்துகிருஷ்ணன் அவரை கடிந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் அரிவாளை எடுத்து ராமலட்சுமியை வெட்டி உள்ளார்.
வீட்டிற்கு வந்து இரத்த வெள்ளத்தில் இருந்த ராமலட்சுமியை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ராமலட்சுமியை அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி பொலிஸார் முத்துகிருஷ்ணனை கைதுசெய்தனர்.

