Jun 25, 2026 - 08:31 PM -
0
திறைசேரியிலிருந்து கடன் செலுத்தப்பட்ட போது சைபர் குற்றவாளிகளிடம் சென்று 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போனமை தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளையும் பரிசீலித்து, இறுதி அறிக்கை ஒன்றை தயாரித்து விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பணம் காணாமல்போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 23ஆம் திகதி அக்குழு கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு (CERT) அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

