Jun 26, 2026 - 01:53 PM -
0
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.
இந்தியாவிலும் புற்றுநோயின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இவற்றில் சுமார் 5 முதல் 10 சதவிகித புற்றுநோய் பாதிப்புகள் மரபணு சார்ந்தவை. மற்ற அனைத்து புற்றுநோய்களும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைப் பழக்கங்களால் ஏற்படுகின்றன.
உதாரணமாக மது அருந்துதல், புகையிலை மற்றும் சிகரெட் புகைத்தல் ஆகியவை புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
அதிலும் குறிப்பாக பெரும்பாலான வாய்ப் புற்றுநோய் புகைப்பிடித்தல், புகையிலை மற்றும் குட்கா உட்கொள்வதால் ஏற்படுகிறது. எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அந்தவகையில் வாய்ப் புற்றுநோய்க்கான 5 முக்கியமான அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
1) வாய்ப் புற்றுநோய் இருந்தால், உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். குறிப்பாக உணவை மெல்லும் போது, நாக்கை அசைக்கும் போது கடுமையான வலி ஏற்படுவது அல்லது தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வுடன் உணவை விழுங்க சிரமப்படுவது ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.
2) வாயின் உள்ளே கொப்புளங்கள் அல்லது புண்கள் அடிக்கடி ஏற்படும். 3 வாரங்களுக்கு மேல் மருந்துகள் உட்கொண்ட பிறகும்கூட அவை குணமாகாமல் இருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
3) புகையிலை உண்பவர்களுக்குப் பற்கள் வெளிறத் தொடங்குவதோடு, வாயினுள் கொப்புளங்களும் உருவாகும். சில நேரம் சிகிச்சை அளித்தாலும் இவர்களுக்கு இப்புற்றுநோய் குணமாகாது என்பதால் கவனத்தோடு இருக்க வேண்டும். இவையன்றி கழுத்திலும் தொண்டையிலும் அசாதாரண கட்டிகள் ஏற்படலாம். அப்படி இருந்தால் கவனத்தோடு இருக்க வேண்டும்.
4) உதடுகளும் நாக்கும் மரத்துப் போவது முக்கிய அறிகுறி. சிலருக்கு வாய் மற்றும் நாக்கின் உட்புறச் சவ்வுகளில் வெள்ளை மற்றும் சிவப்புத் திட்டுகள் உருவாகத் தொடங்கும், மேலும் குரலிலும் மாற்றம் ஏற்படும். இவற்றில் எது தெரிந்தாலும் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
5) இவையன்றி வாய், உதடு, ஈறுகள் அல்லது கன்னத்தின் உள்பகுதியில் ஏற்படும் விவரிக்க முடியாத வீக்கம் அல்லது தடிமனான கட்டிகள் ஏற்படுவதும் முக்கியமான அறிகுறி.
6) இதேபோல எவ்வித பற்சிதைவோ அல்லது ஈறு நோய்களோ இல்லாத நிலையிலும், திடீரென பற்கள் ஆடத் தொடங்குவது அல்லது பற்கள் தானாகவே விழுவது ஆகியவை மிக முக்கியமான அறிகுறி. பலவீனமான இந்த அறிகுறிகளையும் உதாசீனப்படுத்தக் கூடாது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தெரியவந்தால், உடனடியாக வைத்தியரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தாமதம் இருக்கக்கூடாது.

