Jun 26, 2026 - 06:29 PM -
0
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 20 மாத காலப்பகுதியில் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், சிவப்பு அறிவித்தல் இல்லாமலேயே மேலும் 35 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, இதுவரை 58 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாகவும், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, மலேசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, ரஷ்யா, இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் வௌிப்படுத்தினார்.
சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் 23 பேர் சிவப்பு அறிவித்தல் மூலம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். சிவப்பு அறிவித்தல் இன்றி மேலும் 35 பேர் என மொத்தம் 58 பேர் கடந்த 20 மாதங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 232 பேருக்கு சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள். அந்த 96 பேரில் 37 பேர் வெளிநாடுகளில் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 பேர், இந்தியாவில் 11, மலேசியாவில் 1, ஐக்கிய இராச்சியத்தில் 1, பிரான்சில் 1, கனடாவில் 1, ரஷ்யாவில் 1, இத்தாலியில் 1 மற்றும் சவுதி அரேபியாவில் 1 என 37 பேர் இனங்காணப்பட்டு, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு அழைத்து வருவோம். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துகொண்டுதான் இவர்கள் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்துகின்றனர்.
எனவே அந்த ஒருங்கிணைப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும். அதேபோல, இவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டிற்குள் இருக்கும் இவர்களின் சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

