Jun 27, 2026 - 09:05 PM -
0
இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம், 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியான 'அல்மேதா' என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த போது, கடந்த 23ஆம் திகதி இரவில் போத்தல பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
சடலத்தின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அதனை அடையாளம் காண முடியாமல் இருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த விராஜ் ரஷ்மிக டி சொய்சா என்ற 'அல்மேதா' என்பவருடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பெண் ஒருவர், அவரது உடலில் இருந்த பச்சை குத்தல்களை வைத்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அவரது பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதுடன், கடந்த 4 வருடங்களாக அவருடன் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட இந்த நபர், 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை, அஹுங்கல்ல மற்றும் காலி ஆகிய பகுதிகளில் 'லொக்கு பெட்டி'யின் வழிநடத்தலின் கீழ் நடத்தப்பட்ட மூன்று கொலைச் சம்பவங்களிலும் இவரே துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு சந்தர்ப்பத்தில் 13 கிலோவிற்கும் அதிக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.
இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்தவர் என்பதும், 'கரன்தெனிய சுத்தா'வின் தரப்பினருக்கு இவர் கடுமையான அச்சுறுத்தலாக விளங்கியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சடலத்தின் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் வெட்டப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

