Jun 28, 2026 - 03:05 PM -
0
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அதன் பதவிக்காலம் நாளை உத்தியோகபூர்வமாக முடிவடையவிருந்த நிலையில், ஆணைக்குழுவின் பணிகளை நிறைவு செய்து அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள், குற்றவியல் நம்பிக்கைத் துரோகம் மற்றும் சொத்துக்களை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

