Jun 28, 2026 - 09:10 PM -
0
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் திடீர் ஓய்வு முடிவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கும் போட்டியுடன் அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் லண்டன் இரவு விடுதியொன்றில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருடன் தொடர்புடைய ஒழுக்காற்றுச் சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த ஓய்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தியதால், கியா ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவருக்கு எழுத்துப்பூர்வ நடத்தை எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் மேலதிக தண்டனைகள் எவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் ஜோ ரூட்டின் தலைமைத்துவ மாற்றத்திற்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றார்.
பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமுடன் இணைந்து அவர் உருவாக்கிய அதிரடி பேஸ்பால் ஆட்டமுறை, டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்கும் ரசிகர்களின் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்தது.
இவர்களது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், தொய்வடைந்து கிடந்த டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்குப் புதிய சுவாரசியத்தையும் உலகளாவிய ஈர்ப்பையும் தந்து சர்வதேச அரங்கில் ஒரு புதிய அடையாளத்தை இவர்கள் நிலைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

