Jun 29, 2026 - 10:34 AM -
0
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, தற்போது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துதல், நிர்வாக மற்றும் வள ஒதுக்கீட்டு வசதிகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தேவைகள், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரடியாக கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் மற்றும் சேவை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, வைத்தியசாலையின் பல்வேறு நோயாளர் விடுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன், மருத்துவ சேவை வழங்கப்படும் நடைமுறைகளையும் பார்வையிட்டனர்.
இதன்போது உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மக்களின் சுகாதார சேவையில் மிக முக்கியமான பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தியுள்ளது. அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தரமான, சமமான மற்றும் திறன்மிக்க சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும்.

