Jun 29, 2026 - 03:02 PM -
0
நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
அனைத்து ஊடக மற்றும் சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
நேற்று (28) நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட வீரமணி, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஆனால் அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சூர்யா ரசிகர் மன்ற கூட்டத்தில் வீரமணி என்பவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

