Jun 30, 2026 - 02:08 PM -
0
பராசக்தி படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா தொடர்பான வழக்கு தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இயக்கத்தில் உருவான 'பராசக்தி' திரைப்படத்துக்கான ஒப்பந்த ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுவில், தயாரிப்பு நிறுவனம் 8.39 கோடி ரூபா சம்பள பாக்கி தொகை இன்னும் நிலுவையில் உள்ளது என்று சுதா கொங்கரா தரப்பு தெரிவித்துள்ளது. சம்பள பாக்கியை வழங்குமாறு பலமுறை கேட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதற்கட்டமாக சுதா கொங்கரா தரப்பின் வாதங்களை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 8 ஆம் திகதி வரை 'பராசக்தி' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பான எந்தவொரு வணிக ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், அதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பான 'இதயம் முரளி' திரைப்படம் குறித்தும் சுதா கொங்கரா தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். ஜூலை 10 ஆம் திகதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சம்பள பாக்கி விவகாரம் தீர்க்கப்படாமல் புதிய படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதைத் தடுக்கவே இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. அன்றைய விசாரணையில் 'பராசக்தி' படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பான தடை தொடருமா, 'இதயம் முரளி' படத்தின் வெளியீடு பாதிக்கப்படுமா, அல்லது இரு தரப்புக்கும் இடையே புதிய முன்னேற்றம் ஏற்படுமா என்பது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், வழக்கின் அடுத்த கட்ட தீர்ப்பை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
