Jul 10, 2026 - 12:03 PM -
0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு ஆதரவு தெரிவித்து சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து இடைக்கால மனுக்களையும் வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறுகள், முதல் மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தால் மட்டுமே சாத்தியமாகும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இங்கு இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான வி. கே. சொக்ஸி, மனோஹர டி சில்வா மற்றும் கிரிஷ்மால் வர்ணசூரிய, அசோக் பரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், இந்த வழக்கு தற்போது பொதுமக்களின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள ஒரு விவகாரம் என்பதால், இதில் தலையிட்டுத் தங்களது கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தை வேண்டி நின்றனர்.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய குறிப்பிடுகையில், மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பிப்புகள் நிறைவடைந்த பின்னரே இந்த இடைக்கால கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
