Jul 10, 2026 - 01:31 PM -
0
மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்கும் கொடையாளர்களினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிதியுதவிகளும், தற்போது திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் உள்ள சிறப்பு கணக்கு ஒன்றில் பாதுகாப்பாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிதியானது தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற்கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக, வெளிப்படைத்தன்மையுடனும் செயல்திறனுடனும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்தத் திட்டங்கள் முக்கியமாகப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல் மற்றும் சேதமடைந்த பொது உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த அனைத்து நிதிகளின் நிர்வாகமும் பயன்பாடும் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சித் கொள்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
