Jul 10, 2026 - 03:58 PM -
0
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் விநாயகன். முன்னதாக பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஜெயிலர் படம் அவரை சிறந்த வில்லன் நடிகராக உயர்த்தியது.
படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்த காட்சிகள் ரீல்ஸ்களாக வெளியாகி கொண்டே இருந்தது. எந்த அளவுக்கு படத்தின் மூலம் பிரபலமானாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளும் அவரை நோக்கி வந்து கொண்டே இருந்தன. மது போதையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு மற்றும் சில சம்பவங்கள் அவரை போலீஸ் நிலையம் வரை கொண்டு சென்று நிறுத்தியது.
இந்நிலையில் விநாயகன் மீது கேரள மாநிலம் தாழக்கரையைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில்புகார் செய்துள்ளார்.
8 வயதுக்கு உட்பட்ட தனது மகள் புகைப்படத்தை விநாயகன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவேலிக்கரை பொலிஸார் நடிகர் விநாயகன் மீது பெண்களை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகார் அளித்த நபர் விநாயகனுக்கு எதிராக ஒரு முகநூல் பதிவை அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகன் புகார் அளித்தவரின் வாட்ஸ்அப் சுய விபரபடமாக இருந்த அவரது மகள் புகைப்படத்தையும் புகார்தாரரின் தொலைபேசி எண்ணையும் ஆபாசமான வார்த்தைகளுடன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
