Jul 10, 2026 - 04:11 PM -
0
இசையமைப்பாளர் மீது ஏற்பட்ட கடும் கோபத்தால் எழுதப்பட்ட பாடல் இது. ஆனால், பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. என்ன பாட்டு? யார் அந்த இசையமைப்பாளர்?
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரன்’. இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தார். மீரா ஜாஸ்மீன் நாயகியாக நடித்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக ‘காதல் பிசாசே’ பாடலை யுகபாரதி எழுதியிருந்தார்.
அந்த பாடலின் போது நடந்த சம்பவம் குறித்து யுகபாரதி கூறுகையில், “லிங்குசாமி ஒருநாள் அழைத்தார். புதிய படம் இயக்க போறேன் அதுக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று கூறி வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றார். லிங்குசாமி என்னை அறிமுகப்படுத்தினார். நான் அவரை பார்த்ததும் என் கவிதை தொகுப்பைக் கொடுத்தேன். அதை தூக்கிப் போட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்..’ பாடலை இவர் தான் எழுதினார் என லிங்குசாமி, வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்தினார். அப்படி ஒரு பாட்டா? என ஏளனமாகப் பார்த்தார் வித்யாசாகர். எனக்கு கோபம் கூடிக் கொண்டே போனது. ‘இவர்தான் பாடல் எழுத வேணுமா?’ என லிங்குசாமியிடம் கேட்டார் வித்யாசாகர். ஆமா சார் என்றார் லிங்குசாமி.
பாடல் குறித்து என்னிடம் விவரித்த வித்யாசாகர், ‘அது கடிதம் எழுதுவது போல காட்சி. ஆனால், அன்புள்ள என தொடங்கக் கூடாது.’ என்றார். ‘கண்மணி, தென்றல், நிலா பூ’ எதுவும் வரக்கூடாது. வித்தியாசமாக இருக்க வேண்டும் என வித்யாசாகர் கூறிவிட்டார். ஒரு கட்டத்தில் எழுந்து கோபமாக அங்கிருந்து வெளியேறி விட்டேன்.
‘யுகபாரதி நீங்கள் கோபித்துக் கொண்டது தப்பில்லை. ஆனால், பாடல் எழுதாமல் போய்விடக்கூடாது’ என்றார் லிங்குசாமி. எழுதிவிட்டு வாருங்கள், அது நல்லா இல்லைன்னு அவரு நிராகரிட்டும் என்றார். சித்தர் பாடலை படித்துக் கொண்டிருந்தேன். அதில், ‘பெண்ணென்னும் மாய பிசாசு’ என எழுதப்பட்டிருந்தது. அதை அப்படியே மாற்றி, ‘காதல் பிசாசே காதல் பிசாசே’ என எழுதியிருந்தேன்.
மறுநாள் என் நண்பர் தொடர்பு கொண்டு எப்படியிருக்கிறாய் என கேட்டார். நான், ‘ஏதோ இருக்கேன்’ என்றேன். அப்போது தான் ‘ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்ற வரி தோன்றியது. அதன் பிறகு வந்த எல்லா வரிகளும் இசையமைப்பாளர் வித்யாசாகரை திட்டிய வரிகள். அடுத்த நாள் வித்யாசாகரிடம் சென்று இந்தப் பாடலைக் கொடுத்தேன்.
நான் வித்யாசாகர் படித்தார். அதை படித்ததும் என்னை பக்கத்தில் அழைத்தார். என்னை கட்டியணைத்து அவர் சொன்னார், ‘இனிமேல் நான் இசையமைக்கும் எல்லா படத்துக்கும் நீ தான் பாடல் எழுத வேண்டும்’ என்றார். ‘நேற்று நான் அப்படி திட்டியதால் தான் நீ இன்று இப்படி எழுதியிருக்கிறாய்’ என்று பாராட்டினார்” இவ்வாறு யுகபாரதி கூறினார்.
