Jul 11, 2026 - 06:51 AM -
0
சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும், பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு சவற்காரங்களுடன் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளின் பொது வெளியிடமொன்றிலிருந்து பாசல் சேர்விஸ் மூலம் வரவழைக்கப்பட்ட சவற்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும், அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.
கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ். பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
--
