Jul 11, 2026 - 07:46 AM -
0
அரசியல் அழுத்தங்களால் நீடிக்க முடியாது எனக் கூறி, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
தலைவர் அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
"2025-03-02 முதல் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நீரோட்டத்திலிருந்தும், உங்கள் அனைவரின் ஆசியுடனும் ஒத்துழைப்புடனும் நான் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அதன்பிறகு, சங்கத்தின் முன்னேற்றத்திற்காக எனது நேரம், உழைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பணிப்பாளர் சபை மற்றும் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிதி நெருக்கடிகள், நிர்வாகச் சிக்கல்கள், தடைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 சங்கங்களுக்கு மத்தியில் எமது சங்கத்தை முதலிடத்திற்குக் கொண்டு வந்ததுடன், மேல் மாகாண ஆணையாளரின் பாராட்டுக்களையும் பெற்றோம்.
தற்போது எழுந்துள்ள பல சிக்கல்கள் காரணமாக, 2026-07-06 முதல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீட்டிற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து உப தலைவர் தனது கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிருப்தியை வெளியிட்டார்.
என்னைவிட உப தலைவரே பல சந்தர்ப்பங்களில் இந்தச் செயற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவந்தார்.
ஆனால், எங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனால் பணிப்பாளர் சபைக்குள்ளும் சில சிக்கல்கள் எழுந்தன. கூட்டுறவுத் துறையில் அனுபவம் மிக்க, கூட்டுறவுச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு குறித்து புரிதல் கொண்ட முதிர்ச்சியடைந்த ஒருவரே எமக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமே தவிர, எதையும் அறியாத நபர்கள் அல்ல.
அவர்கள் முன்னால் பொம்மைகளாகத் தோன்றி, தலைவர் பதவியின் மதிப்பைக் குறைத்துக்கொண்டு அந்தப் பதவியில் நீடிக்க விருப்பமில்லாததாலேயே நான் இந்தப் பதவியிலிருந்து விலகுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
