Jul 11, 2026 - 09:46 AM -
0
சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய 19 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில், 19 வயது இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் பிலாயின் 'கேம்ப்-1' பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஸ்மிருதி நகர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோஹ்கா பகுதியில் உள்ள 'ஹோட்டல் குனால்' என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இளைஞரின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது கொலையா? தற்கொலையா? என விசாரணையைத் தொடங்கினர்.
ஷதாப் மற்றும் அவரது 23 வயது காதலி கடந்த 8 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் அந்த லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இருவரும் அறையில் வைத்து மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது, அப்போது ஷதாப்பிற்கு அவரது முன்னாள் காதலியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய காதலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இரவு நேரத்தில் இந்த வாக்குவாதம் தீவிரமடைய மதுபோதையிலிருந்த அந்தப் பெண் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் மயக்கமடைந்ததாகவும் தெரிகிறது. அவர் மயக்கத்தில் இருந்தபோது, ஷதாப் தனது காதலியின் ஸ்கார்ஃப் துணியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் அது கொலையாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இறப்பிற்கான காரணத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதனால் உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை அறிந்த ஷதாப்பின் நண்பர்கள் சிலர், இரவு 11 மணியளவில் ஹோட்டலுக்கு வந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அறையின் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் பெண் அறையிலிருந்து வெளியே வந்து ஷதாப் தூங்கிக்கொண்டிருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் காலை 9 மணியளவில் ஷதாப்பின் நண்பர்கள் மீண்டும் வந்து அறைக்குள் சென்றனர். அப்போது அவர் எந்த அசைவும் இன்றி கிடந்ததால் அவரை தனியார் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு உடலை பரிசோதித்த வைத்தியர்கள் ஷதாப் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஷதாப்பின் காதலியை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
