Jul 11, 2026 - 05:39 PM -
0
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதத் தொகை இதுவென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா தெரிவித்தார்.
மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்தபோது, டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு மஹரகம நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா அறிவுறுத்தியுள்ளார்.
