Jul 14, 2026 - 05:03 PM -
0
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேர்தல் ஒன்று அழைக்கப்பட்டால் அதற்கும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, மாகாண சபை தேர்தலுக்கு நிதி ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய பிரச்சினை தேர்தல் முறையே ஆகும் என்றும், புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, டித்வா அனர்த்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது எனவும், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த அனர்த்த நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்த கூற்றை நிராகரித்து இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, டித்வா அனர்த்த நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அந்த 500 பில்லியன் ரூபாயில் இதுவரை சுமார் 260 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், அந்த அனர்த்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் மீதி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு இந்த அனர்த்த நிலைமை பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறிய அமைச்சர், நாட்டில் அவசரத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டாலும் அதற்கான நிதியை ஒதுக்கும் திறன் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
