Jul 14, 2026 - 05:45 PM -
0
நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகவே இந்த 6 கட்சிகளின் இணைவைப் பார்க்க முடிகிறது என சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (13) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக மாறியுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தங்களை மீண்டும் செல்லுபடியான காசுகளாக மாற்றிக் கொள்வதற்காகவே கொழும்பில் ஒன்றுகூடி இவ்வாறானதொரு பொதுத் தளத்தை அமைத்துள்ளனர். இவர்களால் நிச்சயமாக எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
"இதுவரை காலமும் இனவாதமும் மதவாதமும் பேசி, தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து வருவதனாலேயே ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் புதிய வடிவத்தில் வந்துள்ளனர். இவர்களது பழைய கதைகள் எடுபடாத காரணத்தால், புதிய வடிவில் கட்டுக்கதைகளைக் கூறி ஏமாற்ற முனைகிறார்கள். இக்கூட்டணியின் உருவாக்கம் எமக்கு பாரிய சந்தேகத்தை எழுப்புகிறது என தெரிவித்தார்.
--
