Jul 15, 2026 - 09:31 AM -
0
காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
--
