Jul 19, 2026 - 11:51 AM -
0
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டைச் சூழ நிலவும் பலத்த தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
