Jul 20, 2026 - 11:55 AM -
0
கடந்த 2020 ஆம் ஆண்டு சீன மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெண்களை விட திருமண வயதில் உள்ள ஆண்கள் சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளனர். இதனால், அவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோத தரகர்கள் மூலம் பெண்களை மணம் முடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
சீன உச்ச நீதிமன்றத்தகவல்படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்டும், திருமண மோசடி மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபட்ட 1,546 பேர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான வழக்குகளில், சீன ஆண்கள் ஆயிரக்கணக்கான யுவான் பணத்தைக் கொடுத்து திருமணம் செய்த வெளிநாட்டுப் பெண்கள் சில நாட்களிலேயே காணாமல் போய்விடுவதாகவும், சில இடங்களில் வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்பட்டு சீன ஆண்களைத் திருமணம் செய்ய வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, பங்களாதேஷ் தவிர ஏற்கெனவே வியட்நாம், மியான்மர், லாவோஸ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் உள்ள சீனத் தூதரகங்கள் திருமண மோசடி குறித்து எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆண்கள் பலர் பங்களாதேஷிற்கு வந்து, இடைத்தரகர்கள் மூலம் பெண்களைப் பணம் கொடுத்து வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ளதாவது, பங்களாதேஷ் சட்டத்தின்படி மனிதக் கடத்தல் வழக்குகளில் மிகக் கடுமையான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுமார் 3.95 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், திருமணக் கடத்தல் குற்றங்களுக்குத் தூண்டுதலாகவோ அல்லது உடந்தையாகவோ இருப்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, 15,600 ரூபா அபராதம் விதிக்கப்படும். திருமணங்கள் உண்மையான அன்புடன் அமைய வேண்டும். பெண்களைப் பணம் கொடுத்து வாங்குவது பிற்காலத்தில் கடுமையான நிதி இழப்புக்கும், உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைகளுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு சீன தூதரகம் கூறியுள்ளது.
