Jul 20, 2026 - 03:49 PM -
0
பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகளின் மூலம் நேற்று (19) பெருமளவிலான நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டங்களில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸாரால் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று மாத்திரம் 26,849 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு சந்தேகத்தின் பேரில் 564 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 21 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 280 பேரும் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 112 பேரும், அஜாக்கிரதையான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 93 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,225 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் நேற்று மாத்திரம் 762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், போதைப்பொருளுக்கான தேவையை குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் போன்ற பன்முக அணுகுமுறைகள் மூலம் நாட்டில் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களைத் தவிர மேலும் 6 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், இந்நடவடிக்கைகளின் மூலம் 6 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
