Jul 20, 2026 - 03:59 PM -
0
ஓய்வு குறித்த பேச்சுகளுக்கு இந்திய அணி வீரர் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, தொடரை பறிகொடுத்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், தொடர் 1 - 1 என சமநிலையில் இருந்தது. இதனால் கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ஓட்டங்களை குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்களான பென் டக்கெட் 141 ஓட்டங்களையும், ஜேக்கப் பெத்தேல் 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொடுத்தனர்.
388 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் அணி தலைவர் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி அணிக்கு வலு சேர்த்தனர்.
சுப்மன் கில் 77 ஓட்டங்களிலும், ரோகித் சர்மா சதம் கடந்து 138 ஓட்டங்களிரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ஓட்டங்களை மட்டுமே எடுத்த இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது.
இந்த போட்டியின் மூலமாக 400 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இணைந்து விளையாடிய முதல் இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர் ரோஹித் சர்மா - விராட் கோலி. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் இணைந்து 391 போட்டிகளில் விளையாடியிருந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த போட்டிக்கு பின் பேசிய ரோகித் சர்மா ஓய்வு பேச்சுக்களுக்கு பதில் கொடுத்தார். லார்ட்ஸ் போட்டியுடன் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவாக அமையக்கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில், 34 ஆவது சதத்தை அடித்து பதில் கொடுத்தார்.
இந்த நிலையில் தான் ஓய்வு குறித்த பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ரோகித், “வெளியே பேசப்படும் பேச்சுகள் ஒருபோதும் எனது விளையாட்டை தீர்மானித்ததில்லை. என் வேலை பேட்டிங் செய்வது தான். நாட்டிற்காக விளையாடுவது மட்டுமே எனக்கு செய்ய சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.
நான் அறிமுகமானதிலிருந்தே விமர்சனங்கள் இருந்து வருகிறது. நான் விளையாடும் வரை அது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அது ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. நான் களத்தில் என்ன செய்கிறேன் என்பதும், அணியின் வெற்றிக்கு எப்படிப் பங்களிக்க முயற்சிக்கிறேன் என்பதும்தான் முக்கியம். சத்தம் இல்லையென்றால் கொண்டாட்டம் இல்லை. என் வேலை உள்ளே, அவர்களுடைய வேலை வெளியே. இதுதான் என் பார்வை.” என்று ரோகித் சர்மா மனம் திறந்து பேசினார்.
