Jul 20, 2026 - 05:45 PM -
0
உலகக் கிண்ண கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தின்போது, ஸ்பெயினில் நீருற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து சிறுவன் பலியானான்.
48 அணிகள் பங்கேற்ற பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி கொண்ட ஸ்பெயின் வீரர் பெரன் டாரஸ், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் (106 ஆவது நிமிடம்) கோல் அடித்தது அணி வெற்றி பெறுவதற்கு ஏதுவானது. அதன்பின்னர் இரு அணிகளுக்கும், கோல் அடிக்கும் முயற்சி பலன் தரவில்லை.
இதனால், அர்ஜென்டினாவை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் வென்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பும், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர்.
இதனை அடுத்து, ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதில், போர்த்துக்கல் நாட்டை ஒட்டி அமைந்த சலமான்கா மாகாணத்தில் மேற்கு நகரான சியூடேட் ரோட்ரிகோவில் நள்ளிரவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, நீருற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 13 வயது சிறுவன் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி பலியானான். தவிர, 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2 ஆவது முறையாக ஸ்பெயின் அணி கிண்ணத்தை வெற்றி பெற்றதற்காக நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் சூழலில் நடந்த இந்த துயர சம்பவம், பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
