Jul 20, 2026 - 08:12 PM -
0
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
